Wednesday 20 June 2012

ஆன்மிக சிந்தனைகள் »தயானந்த சரஸ்வதி

அன்றாடவாழ்வில் அத்வைதம்

* மனிதர்களாகிய நமக்கு அத்வைதம் என்ற அனுபவம் கிடைக்காததால் வருந்துவதில்லை. ஆனால், நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே அத்வைத உணர்வு இருக்கிறது. ஆனால் அதை நாம் அத்வைதம் என்று உணர்ந்து கொள்ளாமல் தவிக்கிறோம்.
* மகாராஜா அரண்மனையில் வசதிகளுடன் தூங்குகிறார். பிச்சைக்காரன் மண் தரையில் அப்படியே படுத்துத் தூங்குகிறான். தூங்கும்வரையில் இருவருக்கும் அவரவர் வசதிவாய்ப்புகள், சூழ்நிலைகள் குறுக்கிடுகின்றன. 
* தூங்கத் தொடங்கி விட்டாலோ இருவரும் அனுபவிக்கும் நிலை ஒன்று தானே! இடம், நேரம், மனநிலைகள் எல்லாமே மறைந்து விடுகின்றன. தூக்கத்தில் ஆண்டி தன்னை தாழ்வாகவோ, அரசன் தன்னை உயர்வாகவோ எண்ணுவதற்கு இடமில்லை. 
* ஒன்றை நாம் விரும்பித் தேடும்போது, வேண்டும் ஒருவனுக்கு அவன் நாடும் இன்னொன்றுமாக இரண்டு கிடைக்கின்றன. அந்த நிலையில் மகிழ்ச்சியும், நிறைவும் உண்டாகின்றன. இதுவே அத்வைதத்தின் அடிப்படை.
* நாம் வேறு, நம்முடைய அனுபவம் வேறு என்று இரண்டாகப் பிரிந்த நிலையில் நமக்கு மகிழ்ச்சி உண்டாவதில்லை. அத்வைத நிலையில் உணர்பவரும், உணர்வதும் வேறுவேறாக இல்லாமல் இரண்டுநிலையும் ஒன்றாகி விடுகிறது. ஆழமான அமைதியான ஆனந்தமான ஒன்றிய நிலையே அத்வைதம். அதையே நாம் அன்றாடம் தூக்கத்தில் அனுபவிக்கிறோம். 
தயானந்த சரஸ்வதி


வெற்றிக்கான அடிப்படைகள்


* பிறப்பது முதுமையை அடைவதற்காகஅல்ல. நிலையான மகிழ்ச்சியை உணர்வதே பிறவியின் நோக்கம். இதையே மோட்சம் என்று குறிப்பிடுகிறார்கள். மனிதப்பிறவி முழுவளர்ச்சியை அடைந்ததன் அறிகுறியே இதுவாகும். 
* கடவுள் தன்மையை அறிவதற்கு எதிரியாக இருக்கும் மறைமுக இடைஞ்சல்களை அப்புறப்படுத்த வேண்டும். அப்போது தான் உண்மைத் தன்மையை தெளிவாக நாம் அறியமுடியும். கடவுளைப் பற்றி ஆரம்பத்தில் சந்தேகம், தடுமாற்றம் போன்ற குறுக்கீடுகள் இருந்தாலும், நாளடைவில் ஞானத்தால் அவை முற்றிலும் மறைந்து விடும். 
* இறைவன் எல்லாம் அறிந்தவன். நமக்குத் தெரிந்தது கொஞ்சம் தான். எவ்வளவு தான் தெரிந்த ஒருவனின் அறிவும் குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதே. மனித அறிவு சிற்றறிவே. எல்லாம் அறிந்த இறைவனின் அறிவு எல்லையற்றது.
* வெற்றிக்கு அடிப்படைகள் மூன்று. உழைப்பு, காலம், தெய்வம். உழைப்பு நம் கையில் இருக்கிறது. காலத்திற்காக(சரியான தருணத்திற்காக) நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். தெய்வ அருளை வழிபாட்டின் மூலம் பெறலாம். தெய்வஅருள் இருந்தால் மட்டும் தான் ஒரு செயல் வெற்றி பெறும்.
-தயானந்த சரஸ்வதி

இஷ்ட தெய்வ வழிபாடு

கடவுள் உருவம் இல்லாதவர். மக்கள் தமக்குப் பழக்கமான உருவத்தில் அவரை வணங்கி வழிபாடு செய்கிறார்கள். கடவுளை அவரவர் மனதிற்கு உகந்த முறையில் படைத்துக் கொள்கிறோம். குழந்தையாக இருந்தால், கடவுளையும் ஒரு குழந்தையாக பாவித்துக் கொள்ளும். பசு, கடவுளை வணங்க விரும்பினால் தனது வடிவத்தில் தான் வணங்க முற்படும். நாம் வீட்டில் பூஜை செய்யும் போது, மஞ்சள் பொடியில் சிறிது புனிதநீரைக் கலந்து பிடித்து வைத்துவிட்டு பிள்ளையார் என்று கூறுகிறோம். பிடித்து வைத்த மஞ்சளில், ""அஸ்மின் பிம்பே மகா கணபதிம் ஆவாகயாமி'' என்று அவரை உருவாக்கி வழிபடத் தொடங்குகிறோம். மஞ்சளில் பிள்ளையாரைப் படைத்தபின் அதனை மஞ்சளாக நாம் நினைப்பதில்லை. அதன் பின் அம்மஞ்சளை சமையலுக்கோ, மற்றதற்கோ நாம் பயன்படுத்துவதில்லை. இதனைத் தான் ""பிடித்தால் பிள்ளையார்''என்று நாம் வழக்கில் சொல்வதுண்டு. நம் மனதிற்குப் பிடித்த எந்த உருவத்தில் கடவுளை வழிபாடு செய்ய விரும்புகிறோமோ, அந்த வடிவத்தில் இறைவனை வழிபாடு செய்வதையே இஷ்ட தெய்வவழிபாடு என்கிறோம். அந்த உருவம் நாம் கொடுத்தது தான் என்றாலும், நாம் உருவம் கொடுத்தபின் அவ்வடிவம் மதிப்பு பெற்று விடுகிறது. நம் மனம் அந்த வடிவத்தில் ஒன்றிவிடத் தொடங்குகிறது. வெறும் வடிவமாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை. கடவுளாகப் பாவித்து வழிபாடு செய்து மகிழ்கிறோம்.
-தயானந்த சரஸ்வதி சுவாமி

இருக்கும் இடமே சொர்க்கம்

* நமது சமய நூல்கள் சொர்க்கம், நரகம் பற்றி விவரிக்கின்றன. இது நம் நம்பிக்கையை பொறுத்ததே. ஆனந்தமயமான ஒருநிலையை சொர்க்கம் என்கிறோம். நாம் இருக்கும் இடத்தையே சொர்க்கமாக மாற்றுவது நமது கையில் தான் உள்ளது. இதை விடுத்து, அமெரிக்காவில் இருப்பவர்கள் நம்மை விட வசதியாக இருப்பதாக நாம் கருதுகிறோம். அதனால், நமக்கு சொர்க்க பூமியாகத் தெரிகிறது. ஆனால், அமெரிக்காவில் இருப்பவர்கள் மனஅமைதி இல்லாமல் தவிக்கும் போது நமது மதத்தின் தத்துவ விளக்கங்களை படிக்கிறார்கள். அவற்றில் ஆழ்ந்த அமைதியை உணர்கிறார்கள். அவர்களுக்கு நம் இந்திய நாடு சொர்க்கமாகப் படுகிறது. 

* நல்வினைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். நமது வாழ்க்கையில் நல்ல செயல்களைச் செய்தால், அதற்கு ஈடான புண்ணியத்தை தேடிக்கொள்கிறோம். பாங்கில் பணம் சேர்த்தால் அதை செலவு செய்து நாம் ஆனந்தமாக இருக்கிறோம். அதைப் போலவே இந்தப் புண்ணியத்தை செலவிட்டு சொர்க்கத்தில் ஆனந்தத்தை பெறலாம். புண்ணிய பலன் முடிந்ததும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடுகிறோம். ஆகவே, நமக்கு பிறவி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 
தாழ்வு மனப்பான்மையை விரட்டுங்கள்


ஒருவன் தனது நலனுக்காக வாழ்வில் மாற்றங்கள் செய்து கொள்கிறான். அவன் விரும்பும் நிம்மதியும், தேவையான பொருட்களும் அவனுக்கு தடையின்றி கிடைத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவனது வாழ்வில் மாற்றங்கள் எதுவும் தேவைப்படுவதில்லை. அந்த நேரத்தில் அவன் பரிபூரணத்துவம் பெற்றவனாகிறான். தன்னைச் சுற்றி நடக்கும் தீய செயல்களைக்கூட நன்மை தரும் செயலாக பார்க்கிறான். இதனால் அவனுக்கு துன்பம் நேருவதே இல்லை. இவ்வாறு பரிபூரணம் பெற்றவர்களாக வாழ முயற்சி செய்யுங்கள்.


வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் இன்பம் அனுபவிக்கிறோம். இன்பம் தரும் பொருள், அனுபவிக்கும் கருவி மற்றும் அதற்கேற்ற மனநிலை ஆகிய மூன்றும் இருந்தால்தான் இன்பத்தை முழுமையாக அடையமுடியும். ஆனால், இம்மூன்றும் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. காலத்திற்கு தகுந்தாற்போல மாற்றமடைந்து கொண்டிருக்கும். மனநிலையும் எல்லா நேரத்திலும் நிலையாக இருப்பதில்லை. எனவே, இந்த மூன்றையும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.


பலர் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கின்றனர். இந்த மனப்பான்மையைப் போக்குவதற்கு, ஒவ்வொருவரும் தம்மைத்தாமே முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னை அறிந்து கொண்டவர்களுக்கு இதுபோன்ற சிந்தனைகள் வருவதில்லை. எனவே, முதலில் உங்களை அறிந்து கொள்ளுங்கள்.

* நாம் செய்த வினைப்பயனை பொறுத்து நன்மையும் தீமையும் நமக்கு திரும்ப கிடைக்கின்றன. அந்த அனுபவமே சொர்க்கமும், நரகமும் ஆகும். இந்த சுழற்சி இருக்கும் வரையில் கடலில் அலை தோன்றி மறைவதைப்போல, பிறப்பும் இறப்பும் இருந்து கொண்டே இருக்கும். கடவுளை நாம் உணர்ந்து விட்டால் அப்புறம் இந்த அனுபவம் தேவையில்லை. அலை அடங்கிய கடலைப்போல, நாமும் அவருடன் ஒன்றிவிடுகிறோம். அப்புறம் சொர்க்கமோ, நரகமோ, பிறப்போ, இறப்போ நம்மைப் பாதிப்பதில்லை.

No comments:

Post a Comment