Tuesday 17 January 2012

மீள்பதிவிடுவோர் கவனத்திற்கு


மீள்பதிவிடுவோர் கவனத்திற்கு

இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்தில் எழுதுபவை; நாம் மற்றத் தளங்களில் எழுதுவது போலன்றி அதிக நேரத்தை செலவிட்டே ஒவ்வொரு பதிவையும் பதிவிடப்படுகின்றது. இவை ஆங்கில இலக்கணம் சார்ந்த பதிவுகள் என்பதால் கூடுதல் கவனத்துடன் பதிவேற்றப்படுகின்றன. இதன் மூலம் எமக்கு கிடைக்கப் பெறுவது; இன்றைய தொழில் நுட்ப உலகில், ஆங்கில மொழி அத்தியாவசியம் ஆகிவிட்ட நிலையில், அதனை கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் எம்மால் இயன்ற இச்சிறு பணியை செய்ய வாய்ப்பு கிட்டியுள்ளது எனும் ஆத்ம திருப்தியும், ஆங்கில மொழி கல்வியின் அவசியம் உணர்ந்து அதிகரித்து வரும் வருகையாளர்களின் எண்ணிக்கை தரும் மனநிறைவும் ஆகும்.

ஆனால் தொடர்ந்து நடைப்பெற்று வரும் சிலரது செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

இத்தளத்தின் பதிவுகள் பதிவுகளாகவே அல்லாமல் பாடங்களாக இருப்பதனால்; இதன் பயன்பாடு பலரையும் சென்றடை வேண்டும் எனும் நன்நோக்கின் அடிப்படையில் சக வலைப்பதிவர்கள், இணையத்தளத்தினர், மன்றத்தினர், குழுமத்தினர் என பலரும் இத்தளத்திற்கு இணைப்பு வழங்கி பலரதும் பயன்பாட்டிற்கு கொண்டுசென்றுள்ளனர். அவற்றில் சில தளங்கள் ஒரு பாடத்தை அல்லது ஒரு பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு எமது தளத்திற்கு இணைப்பு வழங்கியிருப்பவற்றையும் காணக்கிடைக்கின்றன. இவை நியாயமான செயல்பாடுகளாகும். சிலர் தங்கள் தளங்களின் ஊடாக பதிவிட்டு இத்தளத்தை மேலும் பலருக்கு அறிவித்தும் வருகின்றவர்களும் உளர். இவர்கள் அனைவருக்கும் நாம் என்றும் நன்றியுடைவனாக இருக்கின்றோம்.

ஆனால் சிலர் இத்தளத்தின் பதிவுகளை எமது அனுமதியும் இன்றி அப்படியே வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தொடராகவே செய்து வருகின்றனர். இது முற்றிலும் நியாயமற்ற செயல்பாடுகள் ஆகும்.

நியாயமற்ற செயல்பாடுகள் என நாம் வரையரை செய்வது:

01. வெட்டி ஒட்டுதல் எனும் நோக்கில் பதிவுகள் சீர்குழைக்கப்படல்.

02. முழுப்பதிவையும் மீள்பதிவிடல்.

03. தளத்தின் பெயர் அல்லது இணைப்பு (URL) கொடுக்கப்படாமல் மீள்பதிவிடல்.

04. மீள்பதிவிடுதல் குறித்து அறியத்தராமல் மீள்பதிவிடல்.

05. உள்ளடக்கங்களை திருடி சுயபதிவாக மாற்றியமைத்தல்.

06. தளத்தின் (இணைப்பு வழங்கபட்டிருந்தாலும்) அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து மீள்பதிவிட்டு வருதல்.

இவ்வாறான செயல்பாடுகள் எமது அதிக நேர உழைப்பு; சிலரின் சில நொடிப் பொழுதின் வெட்டி ஒட்டுதலால் சிதைக்கப்படுவதாகவே நாம் கருதுகின்றோம். தவிர பதிவுகள் சீர்குழைக்கப்படும் வகையில் மீள்பதிவிடுதல் என்பது எவருமே பயன்பெற முடியாத ஒன்றாகும். இதனால் எவருக்கும் எந்த பயனும் இல்லை. சில தளங்கள் ஓரிரண்டு பதிவுகள் மட்டுமன்றி, ஒட்டுமொத்தமாக அனைத்து பாடப் பயிற்சிகளையுமே மீள்பதிவாக இட்டு வருகின்றன. இவை முற்றிலும் நியாயமற்ற மோசடியான செயல்பாடாகவே நாம் கருதுகிறோம். அன்மையில் அதிர்ச்சி அடைய வைத்த ஒரு நிகழ்வும் உண்டு. எமது தளத்தில் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே அப்பதிவு இன்னொரு தளத்தில் வெட்டி ஒட்டுதல் நடந்தேறியிருந்தது. மேலும் அவ்வலைத்தளத்தைப் பார்வையிட்டதில் எமது தளத்தில் இருக்கும் அனைத்து பதிவுகளும் அங்கேயும் காணப்படுகின்றன. இது முற்றிலும் நியாயமற்றதும் நாகரீகமற்றதுமான செயல்பாடாகும். இன்னும் சில தளங்களில் இப்பதிவுகள் தமது பதிவுகளாக தோற்றம் காட்டுவதும் நடைப்பெற்றுள்ளன. குறிப்பிட்டு காட்டுவதற்கு ஒன்றிரண்டு தளங்கள் என்றல்லாமல் எண்ணற்ற தளங்கள் இப்படித்தான் செய்துள்ளன. இதனை ஒரு வகையில் அறிவு திருட்டு என்றும் கூறலாம். இவை எமது தளத்திற்கான வருகையாளர்களை திசைமாற்றும் செயல்பாடாகவும் மாறிவிடுகிறது. மீள்பதிவிடுவோர் ஓர் ஆர்வத்தின் வெளிப்பாடாக செய்திருந்தாலும் கூட.

எனவே இவ்வாறு செய்த நண்பர்கள், அறியாமல் செய்திருந்தாலோ அல்லது ஆர்வத்தின் வெளிப்பாடாக செய்திருந்தாலோ இதன் பிறகு இவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் இவ்வறிவித்தலும் உங்களுக்காகவே விடுக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment