Tuesday 17 January 2012

எமது பாடத்திட்டம்


எமது பாடத்திட்டம் - மொழிப்பெயர்ப்பு - விளக்கம்

இந்தஆங்கிலம்வலைத்தளத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றி சற்று தெளிவுப்படுத்த விரும்புகின்றோம். நீங்கள் பாடசாலைகளிலோ, பகுதி நேர வகுப்புகளிலோ, புத்தகங்களிலோ ஆங்கிலம் கற்றதைப் போன்றல்லாமல் இந்த "ஆங்கிலம்" தளத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு சற்று வேறுப்பட்டிருப்பதை அவதானிப்பீர்கள்.

என்ன வேறுப்பாடு?

எடுத்துக்காட்டாக "I do a job" எனும் வாக்கியத்தை தமிழில் மொழிப் பெயர்த்துக் கூறுவோமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்" என்று தான் கூறுவோம். ஆனால் எமது இப்பாடத்திட்டத்தில் அவ்வாறு அல்லாமல் "நான் செய்கின்றேன் ஒரு வேலை" என தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஏனிந்த வேறுப்பாடு?

எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என தமிழில் வாக்கியங்கள் அமைகின்றன.

எழுவாய் + பயனிலை + செயப்படுபொருள் என ஆங்கிலத்தில் வாக்கியங்கள் அமைகின்றன.

இந்த சிக்கல்தான் பலருக்கு ஆங்கில நடைக்கும் தமிழ் நடைக்கும் இடையேயான வேறுப்பாட்டை புரிந்துக்கொள்ள கடினமாக்கின்றது. எனவே இந்த வேறுப்பாட்டை ஆங்கிலம் கற்போர் எளிதாக புரிந்துக்கொண்டு கற்கும் வகையில் "எழுவாய் + பயனிலை + செயப்படுபொருள்" என ஆங்கில நடைக்கு ஏற்ப தமிழாக்கம் செய்து வருகின்றோம்.

ஆங்கில நடைக்கு ஏற்ப தமிழாக்கம் செய்து கற்பதால் பயன் என்ன?

I – நான்
went – போனேன்
to school - பாடசாலை + க்கு

I + went + to school
நான் + போனேன் + பாடசாலைக்கு.

I + went + to school + yesterday
நான் + போனேன் + பாடசாலைக்கு + நேற்று.

I + went + to school + yesterday + with my friends.
நான் + போனேன் + பாடசாலைக்கு + நேற்று + எனது நண்பர்களுடன்

"நான் எனது நண்பர்களுடன் நேற்று பாடசாலைக்கு போனேன்." என தமிழ் நடைக்கு ஏற்ப எழுதி கற்பிப்பதை விட, ஆங்கில நடைக்கு ஏற்ப தமிழாக்கம் செய்து கற்பிப்பதில், ஒவ்வொரு ஆங்கிலச் சொற்களுக்கும் இணையான தமிழ் சொற்களையும் ஆங்கிலம் கற்போர் விளங்கிக் கற்பர். அத்துடன் ஆங்கில வாக்கியங்களை நீட்டி அமைப்பது எவ்வாறு என்பதனையும் எளிதாகப் புரிந்துக்கொள்ளவர்.

இதனையே "பொருள் உணர்ந்துக் கற்றல்" என்றழைக்கப்படுகின்றது.

தவிர இவ்வாறுதான் ஆங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. அநேகமாக வேற்று மொழியை தமது தாய் மொழிக்கு மொழிமாற்றுவோர், தமது தாய்மொழி நடைக்கேற்பவே மொழி மாற்ற விரும்புவர். அதுவே அம்மொழியின் சிறப்பிற்கும், குறிப்பிட்ட மொழியினரின் புரிதலுக்கும் வழிவகுக்கும் என்பது உண்மை. அத்துடன் தமது மொழியின் தனித்துவத் தன்மையை பேணிக் காக்கவும், மொழியின் பயன்பாட்டிற்கு ஏற்ப பொருள் உணர்த்தவும் உதவும். அதனடிப்படையில் தான் தமிழ் கலைச்சொல்லாக்கப் பணிகளும் நடைப்பெறுகின்றன.

இன்றையத் தமிழ் இணைய உலகில் பரவலாகப் பயன்படும் தமிழ் கலைச்சொற்களைச் சற்று பாருங்கள்.

Bus - பாட்டை
Home - முகப்பு
Home page - முகப்புப் பக்கம்

இவை நம் எல்லோரதும் மனதில் பதிந்து, இணையப் பயன்பாட்டிற்கு ஏற்ப சரியான பொருள் தரும் சொற்களாக உள்ளன. இவை ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிறப்புறக் கற்று தெளிந்தவர்களால் இடம், பொருள், ஏவல் நிலையறிந்து உருவாக்கப்படும் சொற்களாகும்.

ஆனால் இவை ஆங்கிலம் கற்க முனையும் ஒரு ஆரம்ப நிலை ஆர்வலருக்கு அல்லது மாணவருக்கு குழப்பத்தைத் தரலாம். அதனால் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் கலைச்சொற்களை கற்க முனையும் முன், சாதாரண ஆங்கிலப் பேச்சு வழக்கில் பயன்படும் சொற்களிற்கு இணையான தமிழ் சொற்களை கற்றுக்கொள்ளல் நன்மை பயக்கும்.

இவற்றை மனதில் கொண்டே நாம், ஆங்கில நடைக்கு ஏற்ப மொழிப்பெயர்ப்பு செய்துவருகின்றோம். எனவே:

Bus - பேருந்து
Home - வீடு, இல்லம், மனை

என முதலில் கற்றுக்கொள்வோம். அதன் பின் தமிழ் கலைச்சொல்லாக்கச் சொற்களை கற்றுக்கொள்ளலாம்.

உலகத் தமிழர் பேச்சு வழக்கு

தவிர உலகத் தமிழர்களான நாம், எமது தமிழ் பேச்சு வழக்கில் சொற்கள், உச்சரிப்புகள் போன்றன வட்டார ரீதியாகவும் வேறுப்பாடுகளை கொண்டுள்ளன.

உதாரணம்:

Did you go to market?
நீ சந்தைக்கு போனாயா? - எழுத்துத் தமிழ் வழக்கு
நீ சந்தைக்கு போனியா? - தமிழக/கொழும்பு பேச்சு வழக்கு
சந்தைக்கு போன நீயா? - யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு
நீ மார்க்கெட் போனாயா? - ஆங்கிலம் இடைச்செருகி பேசும் "தமிங்கில" வழக்கு

எனவே ஒவ்வொரு வட்டார வழக்குக்கும் ஏற்ப, தமிழ் மொழிப்பெயர்த்து ஆங்கிலம் கற்பிப்பது என்பதும் பொருத்தப்பாடாக இல்லை.

Did you go to market?
நீ போனாயா சந்தைக்கு?

என ஆங்கில நடைக்கேற்ப தமிழ் சொற்களை அமைத்து, வாக்கியங்களாக பயிற்றுவிப்பதே இலகுவாக ஆங்கிலம் கற்க உதவும் என நாம் நம்புகின்றோம். மேலும் முடிந்தவரையில் ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் அர்த்தத்தை சரியாக விளங்கிக் கற்றால், காலப்போக்கில் அவரவர் தத்தமது பேச்சு வழக்கிற்கு ஏற்ப தாமாகவே விளங்கிக் கொள்வர்.

எமது ஆங்கில வகுப்பில்

எமது ஆங்கில வகுப்பிற்கு வருகைத் தரும் மாணவர்கள் சிலரிடமும் இவ்வாறான ஒரு குழப்பம் ஆரம்பத்தில் இருந்தது. சிலர் தமிழை பிழையாக எழுதிக் கற்பிப்பதாகவும், செயற்கையான மொழிமாற்றமாக இருப்பதாகவும் கூறினர். ஆனால் இன்று அவர்களாலேயே ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் அர்த்தங்களை விளங்கிக் கற்பதற்கு, இப்பாடத்திட்டமே இலகுவாக இருப்பதாகவும் கூறுப்படுகின்றது.

எனவே அதே முறைமையையே இந்த "ஆங்கிலம்" வலைப்பதிவிலும் தொடர்கின்றோம். இது எந்தளவிற்கு ஏற்புடையது என்பதை நீங்கள் தான் கூறவேண்டும்.

தாய்மொழி தமிழும் ஆங்கிலமும்

இன்றைய காலக் கட்டத்தில் பேசுவது தமிழா? ஆங்கிலமா? என்று அறியாமல் ஆங்கிலம் கலந்து பேசுவோரே அதிகம். இந்த ஆங்கில மோகம் தாய் மொழி தமிழை சிதைத்து விடுமோ என்று பலர் அச்சம் கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதனால் சிலர் ஆங்கில மொழி எதிர்ப்பாளர்களாகவும் எழுந்துள்ளனர்.

"பாய்ந்தோடும் நதிக்கு பள்ளம் மேடு தடையாக இருப்பதில்லை." என்பதுப் போல் எத்தனை அணைக் கட்டினாலும் நதி நீர் நிரம்பி பள்ளம் நோக்கி பாய்ந்தோடவேச் செய்யும். அதேப்போல் இன்றைய தொழில்நுட்ப உலகின் தொழில் தகமைகளுக்காகவும், அவை சார்ந்த கற்கை நெறிகளுக்காகவும் ஆங்கிலம் கற்பதில் ஆர்வம் காட்டுவதை எவரும் நிறுத்திவிட முடியாது. ஆங்கில மொழி அறிவியல் மொழியாக வளர்ந்துள்ள இக்காலக் கட்டத்தில், அதன் அவசியம் அறிந்தவர்கள் அதை நாடிச் செல்லவே முற்படுவர். உலகின் ஏனைய மொழிகள் போல் அல்லாமல் ஆங்கில மொழிக்கென்று ஒரு சிறப்பும் காலத்தின் அவசியத் தேவையும் இருக்கின்றது என்பதனை எவரும் மறுத்திட முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் இன்றைய உலகில் தமிழினத்தின் தலை நிமிர்விற்கு ஆங்கில மொழியறிவே முதன்மை தேவை என்பேன்.

அதேவேளை ஆங்கிலம் கற்று நிமிரும் எம்மினத்தோர், தமிழ் மொழி வளர்ப்பிற்கும் தம்மால் இயன்ற பணியை ஒவ்வொருவரும் செய்ய முன்வருவார் எனில் அதுவே தமிழின் வளர்ச்சியுமாக இருக்கும்.

தமிழ் வழி ஆங்கிலம்

"முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம்" கற்பதால் கிடைக்கப்பெறும் நன்மைகள் என்ன?

கூடுமான வரையில் ஒவ்வொரு ஆங்கிலச் சொற்களுக்கும் இணையான தமிழ் அர்த்தங்களை விளங்கிக்கொள்ள முடியும்.

பேசுவது தமிழா? ஆங்கிலமா? என்று தெரியாமல் பேசுவதை விட, தாம் பேசுவது தமிழ் அல்லது ஆங்கிலம் என்றாவது விளங்கிப் பேச உதவும்.

இன்றையப் புலம் பெயர் நாடுகளில் ஆங்கில வழி கல்வியைக் கற்போரும், உள்ளூரில் ஆங்கில வழி கல்வி கற்போரும், ஆங்கில மொழி ஆளுமை மிக்கவர்களானாலும், அவர்களிடம் இருந்து தமிழ் மொழிக்கான பணியை எந்தளவு எதிர்ப்பார்க்க முடியும் என்பதில் பல கேள்விகள் உள்ளன. விதிவிலக்காக ஒரு சிலர் உதயமாகலாம். தமிழ் மட்டுமே கற்றவரிடம் இருந்தும் பெரிதாக எதனையும் எதிர்ப்பார்க்க முடியாது. அவரோ தனது சுய அறிவு வளர்ச்சிக்கும்; வேற்றுமொழி கற்றோரின் மொழிப்பெயர்ப்புக்களை நம்பியவராகவே இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவராகவே இருப்பார். அதேவேளை தமிழும் ஆங்கிலமும் சிறப்புற கற்று தெளிந்தோரால் எளிதாக பல பணிகளை செய்திட முடியும். ஆங்கிலத்தில் குவிந்து கிடக்கும் எண்ணற்ற தொழில் நுட்பத் தகவல்களை தமிழாக்கம் செய்தாலே மாபெரும் புரட்சியை செய்திடலாம். இதனை தமிழ் வழி ஆங்கிலம் கற்போர் எளிதாக செய்யலாம்.

ஆங்கிலம் கற்பித்தலுக்கான முதன்மை தகமை

தமிழ் மாணவர்களுக்கு, ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான முதன்மை தகமை எதுவாக இருக்க வேண்டும் என்றால், ஆங்கிலம் கற்பிக்கும் தகமையுடன் தமிழ் இலக்கணத்திலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பேன். கவலைக்குறிய விடயம் என்னவென்றால் தமிழ் வழி ஆங்கிலம் கற்பிக்கும் பல ஆசிரியர்களுக்கு தாய் மொழி தமிழ் இலக்கணம் சரியாகத் தெரியாது என்பதே. பிறகு எப்படி ஆங்கில மொழியின் இலக்கணக் கூறுகளை தமிழில் விளங்கப்படுத்த முடியும்? அநேகமாக ஆங்கில மொழியை தாய்மொழியாக கொண்டிராத ஆசிரியர்கள் இருமொழி கற்கையாகவே (Bilingual) ஆங்கிலம் கற்பிக்கின்றனர். அவ்வாறு கற்பிப்போரின் பிரதான தகமை குறிப்பிட்ட இருமொழியிலும் சிறப்புற்றவர்களாக இருக்க வேண்டும். உலகின் பல்வேறு மொழியினர் இருமொழி வழியாக (Bilingual) ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தகமையாக ஆங்கில மொழி அறிவுடன் குறிப்பிட்ட அவர்களின் மொழியிலும் சிறப்புற்றிருக்க வேண்டும் எனும் கொள்கையை கொண்டுள்ளனர். ஆனால் தமிழர்களிடம் மட்டும் இவை ஏனோ காணமுடிவதில்லை. மாறாக ஆங்கில ஆசிரியராவோர் தமிழ் மொழி வெறுப்பாளர்களாகவும், ஆங்கில மொழியை உயர்த்தி பிடிப்பாளர்களாகவும் இருக்கும் அவலநிலை காணப்படுகின்றது. (எல்லோரையும் குறிப்பிடவில்லை) இது வரவேற்கத் தக்க விடயம் அல்ல.

ஆங்கில வழிக் கல்வி கற்கும் தமிழ் மாணவர் என்றாலும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை அறியாதிருக்கும் வரை அறியாமையே மேலோங்கி நிற்கும். உள்ளூரில் ஆங்கில வழிக் கல்வியில் உயர் தரம் கற்றோரும், ஆங்கிலம் பேசுவதில் சிறமப்படுகின்றனர் என்றால் இதுவே பிரதானக் காரணமாகும். இதற்கான ஒரே தீர்வு முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்பதே.

ஆங்கிலம் கற்பிப்போர் இருமொழியிலும் சிறப்புற்றவர்களாக இருக்க வேண்டும் எனும் சட்டம் இயற்றப்படவேண்டும். அப்போதுதான் ஆங்கிலம் கற்று தமிழன் அகிலத்தில் சிறந்திடவும், தமிழ் வழி கற்றதனால் தமிழ் பணி புரிந்திடவும் முடியும்.

ஆங்கில உச்சரிப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு வேண்டுமானால் தாய் மொழி ஆங்கிலேயரைப் பின்பற்றலாம்.

தமிங்கிலம் தவிர்ப்பதற்கு

முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்பதனால், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை அறிந்துக்கொள்வது மட்டுமன்றி, தமிங்கிலத்தை தவிர்ப்பதற்கும் உதவும். இதுவே பரந்துப்பட்ட அளவில் அரசக் கல்வித்திட்டமாக பரிணமிக்குமானால் தமிங்கில வழக்கை காலப்போக்கில் ஒழித்து விடவும் வாய்ப்பு கிட்டலாம்.

பாதித் தமிழை மென்று, மீதித் தமிழை விழுங்கி, சொதப்பித் துப்பி, ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் பேசுவதை விட, முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்று ஆங்கிலத்தை ஆங்கிலமாகப் பேசலாம். தமிழை தமிழாகப் பேசலாம்.

ஆங்கிலக் கல்வி

இன்றைய உலக அறிவியல் வளர்ச்சிக்கு, தொழில் நுட்பத் தகவல்களுக்கு என்று மட்டுமல்லாமல் உலகமயமாக்கலில் தொடர்பாடல்கள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டு நாடுகளுக்குள் பல்தேசிய நிறுவனங்களின் முதலீடுகள் பாரியளவில் பெருகிவரும் நிலையில், உலக மக்களை ஒருங்கிணைக்கும் ஊடகமாக ஆங்கிலமொழி வளர்ச்சி கண்டிருப்பதுடன், அதனைக் கற்க வேண்டிய அவசியமும் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் இன்றைய பாடசாலை ஆங்கிலக் கல்வியின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை தமிழகப் பேராசிரியர் சரசுவதி அவர்கள் கூறுகிறார். அவற்றில் சிலப் பகுதிகளை ஆங்கிலம் உதவி பக்கம் இட்டுள்ளேன். நீங்களும் பார்க்கலாம்.

ஆங்கில மொழி, இலத்தீன் கிரேக்க மொழிகளில் இருந்து மட்டுமன்றி; உலகின் பல்வேறு மொழி சொற்களையும் உள்வாங்கிக்கொண்டு உருவான மொழியாகும். ஆனாலும் ஆங்கிலம் இன்று உலக மொழி தகுதியைப் பெற்றுள்ளதற்கு பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஆங்கில மொழிப் பற்றாளர்களிடம் தோன்றிய மொழிப் பற்றே முதன்மைக் காரணம் எனலாம். கீழுள்ள கட்டுரைகளை வாசித்துப்பாருங்கள் புரியும்.

ஆங்கில மொழி வரலாறு

அமெரிக்க ஆங்கில வரலாறு

தமிழ் ஒரு தனித்துவமான செம்மொழி. தமிழ் மொழியின் வேர்ச்சொற்களில் இருந்து எக்காலத்திற்கும் எந்நுட்பத்திற்கும் தேவையான கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்ளும் தனிச்சிறப்பு வாய்ந்தது. இருப்பினும் ஒரு மொழியின் வளர்ச்சி அம்மொழியின் சொல்வளத்தைப் பொருத்தும் அமைகின்றது. ஆங்கிலம் இன்று உலகளவில் சிறப்புறுவதற்கு அம்மொழியின் சொல் வளமும் ஒரு முக்கிய காரணமாகும். ஆம்! உலகில் எந்த மொழியையும் விட அதிகமான சொல்வளத்தைக் கொண்ட மொழி ஆங்கிலம் தான். இதனை கருத்தில் கொண்டு நாமும் எம்மொழியில் சொல்வளத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும். அனைத்து மொழி இலக்கியம், அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த நூல்களில் சிறந்தவற்றையெல்லாம் உடனுக்குடன் தமிழாக்கம் செய்ய வேண்டும். அவ்வாறான செயல் திட்டங்களில் நாம் இறங்கினால் தான் எமது மொழி கால வெள்ளத்தில் அல்லுண்டு போகாமல் தடுக்க முடியும்.

தமிழ் பற்றுடன் தன்னார்வக் குழுக்களாக இணைந்து கலைச் சொல்லாக்க முயற்சிகளில் ஈடுபடும் பலரை இணையத்தில் காணக்கிடைக்கின்றது. இவை உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியை தருக்கின்றது. ஆனாலும் அதனை முழுவீச்சுடனும் முனைப்புடனும் செயற்படுத்த வேண்டுமாயின், தமிழின் வளர்ச்சி திட்டங்களை தமிழரே எவரினதும் குறுக்கீடின்றி வகுத்து செயல்பட வேண்டும். தரவுகளின் அடிப்படையில் இன்றளவின் 77 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு மொழியாக, உலகில் அதிகம் பேசும் மொழி வரிசையில் தமிழ் 17வது இடத்தில் இருந்த போதும், தமிழர் சிறுபான்மையினராக வாழ்வதால் எதையும் ஒரு வரையறைக்கு மேல் சாதிக்க முடியும் என்று நாம் நம்பவில்லை. ஒரு இனத்தின் வளர்ச்சி என்பது அவ்வினம் சுதந்திரமான இனமாக, தம்மை தாமே ஆளும் இறைமையை உடைய இனமாக இருப்பதால் மட்டுமே சாத்தியம். அதற்கு தமிழர் இழந்த இறைமையை மீட்க வேண்டும். இறைமையின் அவசியத்தை வளரும் இளம் தமிழ் சமுதாயம் உணர்ந்திட வேண்டும்.

இல்லையேல் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று மகாகவி பாரதி கூறியதை மெய்பிப்பவர்களாக ஆகிவிடுவோம்.

இங்கே இந்த "ஆங்கிலம்" வளைத்தளமும், தமிழ் தமிழர் நலன் சார்ந்த நோக்கினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்றதுதான் என்பதை கருத்தில் கொள்க.

சரி! எமது பாடத்திட்டத்திற்கு போவோம்.

எமது பாடத்திட்டம்

"நான் கடைக்குப் போகிறேன், நான் சாப்பிடுகிறேன், நான் படிக்கிறேன்" என நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வார்த்தைகளில் ஒன்றை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டாக "நான் படிக்கிறேன்." எனும் ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டால், இந்த ஒரு வார்த்தையை எத்தனையெத்தனை விதமாக தமிழில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றிப் பேசுகின்றோம்?

நான் படிக்கிறேன்.
நான் படித்துக்கொண்டிருக்கின்றேன்.
நான் படித்தேன்.
நான் படிப்பேன்.
நான் படிக்க வேண்டும்.
நான் படிக்கவே வேண்டும்.
எனக்கு படிக்க முடியும்.

என இன்னுமின்னும் எத்தனையோ விதமாக மாற்றி பேச, எழுத முடியும் அல்லவா? அவ்வாறு நாம் தினமும் பேசும் மொழியைத்தான், எல்லோரும்  ஒரு ஒருமைப்பாட்டுடன் புரிந்துக்கொள்ளும் வகையிலும், எளிதாக கற்கும் வகையிலும், இலக்கண விதிமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக நாம் அன்றாடம் பேசும் ஒரு தமிழ் வார்த்தையை, எவ்வாறு இடத்திற்கு ஏற்ப மாற்றிப் பேசுகின்றோமோ, அதேப்போன்றே ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை உதாரணமாக எடுத்து, அதனை 73 வார்த்தைகளாக மாற்றி இந்த ஆங்கில பாடப் பயிற்சி திட்டத்தின் முதல் பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை இங்கே "Grammar Patterns" களாக வழங்கப்படுகின்றது. பொருள் சிதைவற்ற ஆங்கிலப் பேச்சிற்கு, ஆங்கில இலக்கணம் கற்பது மிக மிக அவசியம். ஆங்கில இலக்கண விதிமுறைகளை எளிதாக விளங்கிக் கற்பதற்கு முதலில் "Grammar Patterns" களைப் மனப்பாடம் செய்துக்கொள்ளல் பயன்மிக்கது. இந்த "கிரமர் பெட்டர்ன்களை" மனப்பாடம் செய்துக் கொண்டீர்களானால், எமது ஆங்கில பாடப் பயிற்சிகளை எவரும் எளிதாக தொடர முடியும். இது மிகவும் எளிதான ஒரு பாடப் பயிற்சித் திட்டம். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எந்த மொழியானாலும் "பேசும் மொழியைத்தான் இலக்கண விதிகளாக வகுக்கப் பட்டுள்ளதே தவிர, இலக்கண விதிகளை வகுத்துவிட்டு எந்த ஒரு மொழியும் பேச்சுப் புழக்கத்திற்கு வரவில்லை." எனவே ஆங்கிலம் பேசி பழகுவதற்கு அச்சமின்றி கூச்சமின்றி சத்தமாக பேசிப் பழகுங்கள். உச்சரிப்பு பயிற்சிகளுக்கு பாடங்களுடன் வழங்கப்படும் ஒலிக்கோப்பினை சொடுக்கி கேட்டுப் பயிற்சி பெறலாம். உங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின்; எமது ஒவ்வொரு பாடங்களின் போதும் வழங்கப்படும் வீட்டுப்பாட பயிற்சிகளை முறையாகப் பயின்றாலே போதுமானது.

முதலில் Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patterns 3, Grammar Patterns 4, Grammar Patterns 5, Grammar Patterns 6 இவற்றைப் பயிற்சி செய்துக் கொள்ளுங்கள். இவற்றைத் தவிர வேறு சில கிரமர் பெட்டன்களும் உள்ளன. அவற்றை உரிய பாடங்களின் போது வழங்கப்படும். "கிரமர் பெட்டர்ன்" களில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் பின் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்போது அதனதன் இலக்கண விதி முறைகளையும் பயன்பாட்டையும் விரிவாகக் கற்றுக் கொள்ளலாம். பாடங்கள் இலக்க வரிசையில் வழங்கப்படுவதால், அவற்றை நீங்கள் இலக்க வரிசையிலேயே தொடரலாம்.

இந்த "ஆங்கிலம்" பாடத்திட்டம் எந்தளவிற்கு ஏற்புடையது என்பதை நீங்கள் தான் கூறவேண்டும். மாற்று கருத்து இருந்தால் அதனையும் கூற மறவாதீர்கள். உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களே இத்தளத்தை மேலும் மேம்படுத்த உதவும்.

இத்தளம் பயனுள்ளது என கருதினால், இத்தளத்தை ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள்.

No comments:

Post a Comment