Sunday 8 April 2012

உஷ்டிராசனம்





விரிப்பில் முழங்காலிட்டு அமரவும். முட்டுக்களை அகலமாக விரித்து உட்காரவும். மார்பு, கழுத்தை சிறிது பின் நோக்கி வளைத்து தலையை பின்புறம் தொங்க விட்ட நிலையில் ஒவ்வொரு கையாக உடலின் பின் பகுதிக்கு கொண்டு சென்று விரல்களை ஊன்றிய குதிகால் பகுதிகளை பிடிக்கவும். வாய்மூடிய நிலையில் மூச்சை நன்றாக உள்வாங்கி வெளியிடவும். 15 வினாடிகள் இவ்விதம் இருந்த பின்பு ஒவ்வொரு கையாக முன் கொண்டு வந்து முழங்காலிட்டு அமரவும். இரண்டு நிமிட இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு முறை இந்த ஆசனம் செய்யலாம். முழங்கால் மூட்டுக்களிலுள்ள நச்சு நீர் குறையும். ஆஸ்த்துமா நோய் குறையும். இது ஒரு மருத்துவ ஆசனமாகும். தைராய்டு கிளாண்டுகள் இயக்கம் சீர்பெற உதவும்.
மனம் : இடுப்பு பகுதி மற்றும் கழுத்து
மூச்சின் கவனம்: வளையும் போது வெளி மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது. வயிற்றின் உள்ளுறுப்புகள் பலமடைந்து விலா எலும்புகள் நன்கு விரிவடைகின்றன.
குணமாகும் நோய்கள்: முதுகுவலி, சுவாசக் கோளாறுகள், முழங்கால் வலி, இடுப்பு வலி இடுப்பு வாயு பிடிப்பு, கீழ் வாயு வாயுக் கோளாறு, இரைப்பை கோளாறுகள், முதலியவற்றிற்கு நல்லது. தன்னம்பிக்கையினை வளர்க்கிறது. சோம்பலை நீக்கி பயிற்சியாளரைச் சுறுசுறுப்பாகவும் செய்கிறது.
எச்சரிக்கை: இதய நோயுள்ளவர்கள் கவனமாகச் செய்யவும். குடல்வாயு நோயுள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது.

No comments:

Post a Comment