Monday 30 January 2012

கோயம்புத்தூர்

தலைநகரம் : கோயம்புத்தூர்
பரப்பு : 7467.99 ச.கி.மீ
மக்கள் தொகை : 4,224,107
எழுத்தறிவு : 2,916,996 (76.95 %)
ஆண்கள் : 2,156,280
பெண்கள் : 2,067,827
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 566




வரலாற்றுச் சிறப்பு:

சங்க காலத்திலேயே தமிழகத்தை சோழநாடு, பாண்டியநாடு, சேரநாடு, கொங்குநாடு என்று பிரித்திருந்தார்கள். கோவை மாவட்டம் கொங்கு பகுதியில் இருந்தது. கொங்கு நாடுபற்றி சங்க இலக்கியங்களில் நிறைய தகவல்கள் கிடைக்கிறது. சேர நாட்டிற்கு அடுத்த நாடாக கொங்கு பகுதி இருந்தததால் சேரர்கள் இப்பகுதிகளை ஆண்டனர். களப்பிரர்கள், இராஷ்டிரர்கள், கங்க மன்னர்கள், சோழர்கள், விஜயநகரமன்னர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர் வரை இப்பகுதி அந்தந்தக் காலங்களில் அவர்களால் ஆளப்பட்டது.
கல்வெட்டில் காணப்படும் ஊர்கள்
சோழமாதேவி, தாளி, குடிமங்கலம், ஜோதம்பட்டி, கடத்தூர், கணியூர், கண்ணாடிப்புத்தூர், கொழுமம், குமாரலிங்கம், திருமுருக்கன்பூண்டி, அவிநாசி முதுமக்கள் இடுகுழிகள் கிடைத்த ஊர்கள் - இருகூர், சாவடிப்பாளையம், வெள்ளளுரில் 522 ரோம நாணயங்கள் கிடைத்துள்ளன.


பொது விபரங்கள்
பெயர்க்காரணம்:
கோயம்புத்தூர் என்பது 'கோசர்' என்று சங்க இலக்கியம் கூறும் பொய்க்கூறாதவர் வாழ்ந்த இடம் என்று கூறப்படுகிறது. கோசர் என்பது கோயர் என்றாகி, கோயன் + புத்தூர் = கோயம்புத்தூராகி விட்டது.
எல்லைகள்:
கோவை மாவட்டத்தின் வடக்கில் கர்நாடக மாநிலமும் தெற்கில் கேரளமாநிலமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கில் நீலகிரி மாவட்டமும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையும், நீலமலையும் ஒரு மதில்போல் இம்மாவட்டத்தை வளைத்துள்ளன.


கோவை மாவட்டத்திலுள்ள காடுகளின் பரப்பு - 1,69,720 ஹெக்டேர். சாலைகளின் நீளம் - 7434.8 கி.மீ. பதிவு பெற்ற வாகனங்கள் 2,57,042, வங்கிகள் 328, காவல்நிலையங்கள் - 60, காவலர்கள் 5910, தந்தி அலுவலகங்கள் 260, தந்தி அஞ்சலகங்கள் 172, பொதுத் தொலைபேசிகள் - 1134. கோவை மாவட்டத்தின் தலைநகரம் கோயமுத்தூர். இதன் பரப்பு 6623.97 ச.கி.மீ, மக்கள் தொகை 35,08.374 பேர். இதில் ஆண்கள் 17,97,189, பெண்கள் 17,11,185 பேர். எழுத்தறிவு உள்ளோர் 20,75,023 பேர், மக்கள் நெருக்கம் ச.கி.மீ. 473 பேர்.
வருவாய் நிர்வாகப் பிரிவு
கோட்டங்கள் - 3; வட்டங்கள் - 9
வருவாய் கிராமங்கள் - 441 உள்ளாட்சி நிறுவனங்கள்
மாநகராட்சி - 1 கோவை
நகரியம் - 2 மதுக்கரை, வால்பாறை
ஊராட்சி ஒன்றியம் - 21
பேரூராட்சி - 55
பஞ்சாயத்துக்கள் - 389
சட்டசபை தொகுதிகள் - 15
மேட்டுப்பாளையம், அவிநாசி, தொண்டாமுத்தூர், சிங்கா நல்லுர், கோயம்புத்தூர் மேற்கு, கோயம்புத்தூர் கிழக்கு, பேரூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை, தர்மாபுரம், பொங்கலுர், பல்லடம், திருப்பூர்
பாராளுமன்ற தொகுதிகள் - 2
1. கோயம்புத்தூர்  2. பொள்ளாச்சி

கல்வி
பள்ளிகள்
தொடக்கப்பள்ளிகள் 1,441 - நடுநிலைப்பள்ளிகள் 234  - உயர்நிலைப்பள்ளிகள் 133  - மேநிலைப்பள்ளிகள் 134
கல்லுரிகள்
பொறியியல் கல்லுரிகள் 3  - மருத்துவக்கல்லுரிகள் 2  - பார்மசிக் கல்லுரி 1  - ஆசிரியர் பயிற்சிக்கல்லுரிகள் 4 கலை, அறிவியல் கல்லுரிகள் 31 - சட்டக்கல்லுரி 1 - வேளாண்மை தோட்டக்கலை கல்லுரிகள் 3 - தொழில் நுட்பக்கலை கல்லுரிகள் 7  - பல்கலைக்கழகங்கள் 3

வழிபாட்டிடங்கள்: Maruthamalai

பேரூர் - பட்டீஸ்வரர் கோவில், காரமடை-அரங்கநார் கோவில், குருந்தமலை முருகன் கோவில், அவிநாசியிலுள்ள அவிநாசியப்பர், திருமுருக்கன் பூண்டியில் உள்ள முருகநாதர் கோவில், மேல் சிதம்பரம் நடராஜர் கோவில், கோவை கோணியம்மன், மருதமலை முருகன், ஈச்சனாரி விநாயகர் முதலியவை வழிப்பாட்டிடங்கள் இம்மாவட்டத்தில் முக்கியமான தலங்களாகும்.


சுற்றுலா இடங்கள்:

ஆனைமலை வனவிலங்குகள் புகலிடம் - இப்புகலிடம் சுமார் 1400 மீ உயரத்தில் 948 ச.கி.மீ. பரப்பளவில், கோவைக்குத் 90 கி.மீ. தொலைவில் பொள்ளாச்சி வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


இங்கு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுநாய், பறக்கும் அணில் போன்ற விலங்குகளும், பல்வேறு பறவை இனங்களும் காணப்படுகின்றன.


அமராவதி அணைக்கட்டில் முதலைகள் உள்ளன. டாப் ஸ்லீப் பகுதியில் எண்ணற்ற பறவை இனங்களைக் காணலாம். இந்தப் புகலிடத்தைச் சுற்றிப்பார்க்க வெளிநாட்டவர் மிகுதியாக வருகின்றனர். இப்புகலிடத்தை யானை மீது அமர்ந்து அல்லது வாகனத்தில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை மாவட்ட பழங்குடிகள்:

ஆனை மலையிலுள்ள கோழி கமத்தி, ஆழியார் அணை, சவமலை, பவர்ஹவுஸ், கொல்லத்திப்பாறை போன்ற இடங்களில் மலமலசர் என்ற பழங்குடிகள் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். மலையில் வாழ்பவர்கள் மலைமலசர், மலையடிவாரத்தில் வாழ்பவர்கள் பதிமலசர் என்னும் இருபிரிவினர் உள்ளனர். பதிமலசர்கள் ஆனைக்குந்தி, சேத்துமடை, அட்டஹட்டி, கீழ்புனாச்சி, சர்க்கார்பதி முதலிய இடங்களில் வாழ்கிறார்கள்.

காடர்:
ஆனைமலைப்பகுதியில் உள்ள பரமன்கடவு, பன்னிகுழி, சவமலை, நெடுங்குன்றம், கருங்குன்று, அயன்குளம், வாகைமலை ஆகிய இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
முதுவர்:
தங்கள் பூர்வீகம் மதுரை என்று சொல்லிக்கொள்கிறார்கள். மற்ற பழங்குடிகளைவிட நாகரீகம் அடைந்தவர்களாக காணப்படுகின்றனர். வாய்மொழி இலக்கியம், இசை ரசிக்கும் இயல்பு போன்ற சிறப்பினைப் பெற்றவர்கள் இவர்கள்.
புலையர்:
ஆனைமலைப்பகுதியில் 2000 குடும்பங்கள் வாழ்கின்றனர். குறிப்பாக பொள்ளாச்சியிலிருந்து முடீஸ் போகும் வழியில் நீர்வீழ்ச்சி என்ற இடத்திற்கு அருகில் மலைகளிலும், மலையடிவாரத்திலும், கீழ்ப்பூனாஞ்ஜியிலும் இவர்கள் வாழுகின்றனர்.

காடு-மலை வளம்:

ஆனை மலையின் உயரம் கடல் மட்டத்திற்குமேல் 2000 அடி. இதன் சிகரங்கள் 4000 அடி உயரத்திலும், உச்சி முகடுகள் 5000 அடி உயரத்திலும் காணப்படுகின்றன. குச்சிமலை கடல் மட்டத்திலிருந்து 8500 அடி வரை உயர்ந்து நிற்கிறது. மைக்கேல் பள்ளத்தாக்கின் தெற்கில் குமரிக்கல் மலை காணப்படுகிறது. இது அஞ்சநாடு பகுதியில் 7000 அடி உயரத்தில் புதுக்கல் என்ற இடத்தில் காணப்படுகிறது.

வெள்ளியங்கிரிமலை இம்மாவட்டத்தின் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நீலகிரி மலையின் தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. இதன் சிகரங்கள் சில இடங்களில் 5000 அடி உயரத்தில் தென்படுகின்றன.

இம்மாவட்டத்தில் காட்டுவளம் மிகுந்து காணப்படுகிறது. இதன்மூலம் நிறைய மரங்கள் செறிந்து காணப்படுகின்றன. இத்தகைய செறிந்த காடுகள் அவிநாசி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை வட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

இம்மாவட்டத்தில் காணப்படும் காடுகளை எட்டுப்பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

1. போலம்பட்டிப்பள்ளத்தாக்கு. கோயம்புத்தூர் - சிறுவாணிச்சாலை வழி இப்பள்ளத்தாக்கின் ஊடே செல்கிறது. இங்கு வாகை, கருவாகை, வேல்வாகை, பில்லமருது, தாடச்சி, கெங்கை, ஈட்டி, வெண்தேக்கு, வெள்ளநாகை, சாதாதேக்கு போன்ற உயர்ந்த மரங்களும் உள்ளன. 5000 அடிக்கு மேற்பட்ட பகுதிகளில் வேடிப்பில்லா, பால் வடிஞ்சான், காட்டுப்பன்னை, மலைக்கொன்னை நாங்கு மரங்களும் வளர்ந்துள்ளன.

2. தாடகம் பள்ளத்தாக்கு - ஊஞ்சல், காட்டு எலுமிச்சை, தெரணை, புல்லாவரம், பொரசு, மலைக்கிளுவை, தணக்கு போன்ற மரங்கள் இங்கு வளர்கின்றன.

3. டாப்ஸ்லிப் பகுதி - இங்கு 70 அங்குலம் மழை பெறுவதால், 150 அடி உயர மரங்கள் வளர்கின்றன.

4. ஆனைமலை காடுகள் - துணக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பூனச்சி பகுதிவரை காணப்படுகிறது. இங்கு அதிக மழை பெறுவதால் காடுகள் செறிந்து காணப்படுகின்றன.

5. பொள்ளச்சி பகுதி - இங்கு தேக்கு, கருமருது, கடுக்காய், ஓதியமரம், இலவமரம், பெருமூங்கில், கல்மூங்கில் மிகுதியாக உள்ளன.

ஆறுகள்:

பவானி, நொய்யல், அமராவதி, சின்னாறு, குரங்கனாறு, ஆழியாறு, சிறுவாணி ஆறு, பரம்பிக்குளம், நீராறு, சோலையாறு, போன்றவை பாய்ந்து இப்பகுதியை வளப்படுத்துகின்றன.

அணைகள்

நீலி அணைக்கட்டு, பாதுக்காடு அணைக்கட்டு, குனியமுத்தூர் அணைக்கட்டு, குறிச்சி, வெள்ளூர், சிங்காநல்லுர் போன்ற அணைக்கட்டுகளால் கோவை, பல்லடம் பகுதிகளில் 15,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. அமராவதிக்கு குறுக்கே எட்டு அணைகள் கட்டப்பட்டு 9000 ஏக்கர் நிலம் உடுமலை வட்டாரத்தில் பாசனம் பெறுகிறது.

அமராவதி நீர்த்தேக்கத்தின் மூலம் 40,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

நீர்மின் திட்டம்:

பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்மின் திட்டத்தின் கீழ் 4 இடங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சோலையாறு, ஆழியாறு, சர்க்கார்பதி மின்நிலையங்கள் மூலம் 200 மெகா.வாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

வேளாண் உற்பத்தி:

கோவை மாவட்டத்தில் 65 சதவீதம் உணவு தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு முதலிய உணவுப்பயிர்களும், துவரை, உளுந்து, கொள்ளு, மொச்சை கடலை முதலிய தானியங்களும், பணப் பயிர்களான பருத்தி, நிலக்கடலை, புகையிலை, தேங்காய், வாழை, கரும்பு, மஞ்சள் போன்றவையும் பெருமளவு விளைவிக்கப்படுகின்றன. பல்லடம் வட்டத்தில் பழவகைகள் அதிகம். கோவை மாவட்டத்தில் தென்னை மிகுதி. திருப்பூர், அவிநாசி எலுமிச்சைக்கும், பொள்ளாச்சி வெற்றிலைக்கும் பேர் பெற்றவை. ஆனை மலையில் ஏலக்காய், சின்கோ, ரப்பர் மரங்கள் விளைகின்றன.

கோவையின் தொழில் வளர்ச்சி:

கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழ்பெற்றுள்ளது. இங்கு பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்ணும் கால நிலையும் நிலவுவதால் ஆலைகள் பெருகின. 1888-இல் கோயம்புத்தூரில் ஸ்பின்னிங் அண்டு வீவிங் கம்பெனி லிமிடெட் தான் முதல் பஞ்சாலை. அடுத்த 20 ஆண்டுகளில் பல மில்கள் வளர்ந்தன. 1933-இல் பைகாரா மின் உற்பத்தி தொடங்கியதும் பல ஆலைகள் புதிதாகத் தோன்றின. கோவையில் மட்டும் ஏறக்குறைய அறுபது ஆலைகள் உள்ளன. இது தவிர சிங்காநல்லுர், பீளமேடு, கணபதி, உப்பிலிபாளையம் முதலிய இடங்களிலும் பல ஆலைகள் உள்ளன.
பருத்தி பிரிக்கும் தொழிற்சாலை:
சூலுர், சிங்காநல்லுர், பீளமேடு, இடங்களில் மட்டும் 31 பருத்தி பிரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.
பிளேடுகள்:
உள்நாட்டிலேயே பிளேடுகள் தயாரித்தது கோவைதான். இன்று ஆண்டுக்கு 2400 இலட்சம் பிளேடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவையை பார்த்தே மற்ற மாநிலங்களில் பிற்காலத்தில் லேசர் பிளேடுகள் தயாரிக்கப்பட்டன.
கடைசல் இயந்திர தொழிற்சாலை:

இயந்திரம், துளையிடும் இயந்திரங்கள், மாவரைக்கும் இயந்திர குடைக்கல் போன்ற இயந்திரத் தொழிற் கருவிகள் தயாரிக்கும் நுற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இம்மாவட்டம் முழுவதும் உள்ளன. பெரும் தொழிற்சாலைகளுக்கு சிறு தொழிற்சாலைகளுக்கும் இவை முக்கியமானதால் இங்கு பெருகி வளர்ந்துள்ளன.
அஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலை:
தீப்பற்றாத அஸ்பெஸ்டாஸ் கூரைகள் செய்யும் தொழிற்சாலை கோவைக்கருகில் 5 மைல் தொலைவில் 1953 முதல் செயல்பட்டு வருகிறது. அஸ்பெஸ்டாஸ் பொருள்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. 3 கோடி ரூபாய்க்கான இத்தொழிலில் 2500க்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
நீரிறைக்கும் பம்புகள்:
கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பம்புகள் இன்று உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்ட்ரி பியூகல் பம்புகளையும் அதைச்சார்ந்த துணை உறுப்புகளையும் தயாரிக்கும் நுற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரி 7000 பம்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பல்வேறு மோட்டார் தொழிற்சாலைகள்:
வேளாண்மைக்கும், தொழிற்சாலைக்கும் அத்தியாவசியமான மோட்டார்கள் சிறிதும், பெரிதுமான பலவித வடிவங்களில் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இறக்குமதி தளர்வினால் இத்தொழில் வளர வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்மாவட்டத்தில் இயங்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 2 குதிரை திறன் முதல் 50 குதிரைதிறன் வரையுள்ள மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சராசரியாக மாதத்திற்கு 5000 மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பால் உற்பத்தி:
இரண்டாம் பால் பெருக்குத் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 70 இலட்சம் செலவில் புதிய பால் பண்ணைக்கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பால்பண்ணைத் திட்டத்தின் மூலம் 500 சங்கங்கள் பலனடைகின்றன. நாள் ஒன்றுக்கு 1,50,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 1,02,000 விவசாயிகள் பயனடைகின்றனர். இதில் ஈடுபட்டுள்ள கால் நடைகளின் எண்ணிக்கை 1,32,000.
ஏ.சி.சி. சிமெண்ட்:
இத்தொழிற்சாலை கோவையிலிருந்து எட்டாவது மைல் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு 2000 பேர் பணியாற்றுகின்றனர். மாதம் சராசரி 25,000 டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.
சோப்பு உற்பத்தி:
இம்மாவட்டத்தில் உள்ள சிறுதொழில்களில் சோப்பு உற்பத்தி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சோப்பு, பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர இத்தொழிலுக்குத் தேவையான சோடியம் சிலிகேட் என்னும் கச்சாப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் உள்ளது. இது ஆண்டுக்கு 500 டன் தயாரிக்கிறது.
சிக்கோனா தொழிற்சாலை:

தமிழக அரசின் முயற்சியால் 1955ல் இத்தொழிற்சாலை தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இங்கு குனைன் சல்பேட் மற்றும் குனைன் ஹைட்ரோ குளோரைட் போன்ற கொய்னாப் பொருட்கள், குனிடின் சல்பேட், மருந்து போன்றவையும், இதுதவிர நறுமணத் தைலங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தமிழக அரசின் தொழில் முதலீடுகள்
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இதுவரை 45 தொழிற்பிரிவுகளைத் தோற்றுவித்துள்ளது. அவற்றில் பத்துத் தொழிற்பிரிவுகள் பொதுத் துறையின் கீழும், மற்ற 36 தொழிற்பிரிவுகள் கூட்டுத்துறையின் கீழும் நிறுவப்பட்டுள்ளன. இதில் அரசு தொழிற்கழகத்தின் முதலீடு சுமார் 600 கோடி ஆகும். இதனால் 20,000 பேர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

1979-ஆம் ஆண்டு மாவட்ட தொழில் மையம் தொடங்கப்பட்ட பின்னர் 10 ஆயிரத்திற்கு அதிகமான சிறுதொழில் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

1960ஆம் ஆண்டு கதர் கிராமத் தொழில் வாரியம் உருவாக்கப்பட்ட பின்னர் பின்வரும் கிராமத்தொழில்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. சோப்பு, தோல், செக்கு, எண்ணெய், சுண்ணாம்புத் தொழில், தேனீ வளர்ப்பு, காலணி தயாரித்தல், மட்பாண்டம் தச்சு, கொல்லுத்தொழில், பிரம்புதொழில் முதலியவை வளர்ந்து வருகின்றன.

தொழிற்பேட்டைகள்:

குறிஞ்சி, திருப்பூர், சிறுமுகை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சிறுதொழிற்கள் வளர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சுயதொழில் தொடங்குவதற்கு இத்தொழிற்பேட்டைகள் இடங்களைத் தந்துள்ளது.
தொழில் மேதை ஜி.டி.நாயுடு:
ஜி.டி.நாயுடு ஒரு தொழில் மனிதர் மட்டுமல்ல சிறந்த அறிவியலாளரும் ஆவார். பேருந்து போக்குவரத்தை நடத்திய நாயுடு அதை நன்கு புரிந்து கொண்டு, மோட்டாரில் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்து சாதனை புரிந்தார். அவர் கண்டு பிடிப்புகளில் சில-

1. மோட்டாரில், ரேடியேட்டருக்கு சமமான இயந்திரம்

2. என்ஜின் ஓடும்போது அதன் துடிப்பை அறியும் கருவி

3. பேருந்து அதிர்ச்சியை சோதிப்பதற்கான இயந்திரம்

4. கேமராவில் டிஸ்டண்ட் அட்ஜஸ்டர்

5. ஓட்டுப் பதிவு செய்யும் இயந்திரம்

6. குறைந்த விலை வானொலி

7. ரேஸாண்ட் என்னும் மின்விசை மழிப்பான்

8. ஒரு அங்குலத்தில் இருநுற்றில் ஒரு பாகம் கன அளவுள்ள பிளேடு இது ஓராண்டுக்கு ஒரு நபருக்கு பயன்படும்.

இதுபோன்ற 80 வகையான கண்டுபிடிப்புகள். வேளாண்மையில் புதிய வகை விளைச்சலை உண்டாக்கக்கூடிய நாயுடு காட்டன் என்ற பருத்தி ஜெர்மனிக்குச் சென்றது. அதிசய சோளச் செடி, பருத்திச்செடி, பெரியதுவரைச்செடி, கசப்பை இனிப்பாக மாற்றுவது, விதையில்லாத பழம் வாழை மரத்துக்கு பூச்சி தடுப்பான் போன்ற பலவற்றை கண்டுபிடித்து உலகுக்கு அளித்தார்.

மாணவர்களுக்கு பாலிடெக்னிக்கும், பொறியியல் கல்லுரியும் உருவாக்கி தொழிற்புரட்சிக்கு வித்திட்டார்.
பொள்ளாச்சி மகாலிங்கம்:
தமிழக பொருளாதாரம் சிறக்க உழைக்கும் தொழில் மேதைகளில் இவரும் ஒருவர். 'சக்தி குருப் ஆப் கம்பெனிஸ்' என்ற அமைப்பில் இவர் தொடாத தொழிலே இல்லை என்னும் அளவில், சர்க்கரை, துணி, Pollachi Magalingamகுளிர்பானங்கள் தயாரிப்பது, உருக்காலை, செயற்கை வைரம், லாரி, கார் வாங்கி விற்பது, பொருள் போக்குவரத்து, டயர் புதுப்பித்தல், மற்றும் பல முகவாண்மைகளில் ரூ.200 கோடி முதலீட்டில் பலருக்கும் வேலை வாய்ப்பளித்து வருகிறார். இவர் நடத்தி வரும் தொழில்கள் - ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட், சக்தி பைனான்ஸ், ஸ்ரீசாமுண்டீஸ்வரி சுகர்ஸ்லிட், பண்ணாரியம்மன் சுகர்ஸ் லிட், சக்தி டெக்ஸ்டைல்ஸ், ஸ்ரீபகவதி டெக்ஸ்டைல்ஸ், ஆனைமலை என்ஜினியரிங், நாச்சிமுத்து பாலிடெக்னிக், சக்தி சாரிடிஸ், குமரகுரு காலேஜ் ஆப் டெக்னாலஜி, சக்தி ஆட்டோமொபைல்ஸ், ஆனைமலைஸ் ரீடிரெடிங், நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லுரி முதலியவைகளாகும்.

ஜி.ஆர். தாமோதரன், இவர் கலைக்கதிர் என்கிற மாதஇதழ் மூலம் அறிவியல் தமிழ் வளர்ந்து வந்தார். இவர் சென்னைப்பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருமுறை இருந்தவர்.

டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார் - இவர் கல்விஅமைச்சராக இருந்தபோது கிராமங்களுக்கு கல்வியை எடுத்துச்சென்றவர். மற்ற கோவை நகரப் பிரமுகர்கள் கோவை அய்யாமுத்து தோழர் பாலதண்டாயுதம், நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார், சி. சுப்பிரமணியம், அரங்கநாயகம், எஸ். மோகன் குமாரமங்கலம், ஜஸ்டிஸ். எஸ். மோகன், புதுமைப்பித்தன், சிவக்குமார், கே.ஏ. மதியழகன், உடுமலை நாராயக்கவி, கோவை செழியன் முதலியோர்.
திருப்பூர்:
இங்கு உற்பத்திசெய்யப்படும் பின்னல் ஆடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றவை. பருத்தி பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் 35 இருக்கின்றன. ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்ளாடைகளThiruppur் உற்பத்தியாகின்றன. பனியன் தொழில் வளர்ச்சிக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் அயராது பாடுபட்டு வருகிறது. இதில் 5000 உறுப்பினர்கள் உள்ளனர்.

கே. பழனிச்சாமி, எஸ். இராமசாமி, க. நாராயணசாமி ஆகிய தொழில் மேதைகளால் நிட்மேக் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டப்பிறகு இத்தொழில் பெரும் வளர்ச்சி யடைந்துள்ளது. இதற்கான இயந்திரங்கள் கோவையிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதன் சார்புத் தொழிலாகச் சலவை தொழிலும், அட்டைப்பெட்டிகள் தயாரிப்பதும் நடக்கிறது. இதற்காகவே பல அச்சகங்கள் நிறுவப்பட்டன. சுமார் 2000 நிறுவனங்கள் பனியன் தொழிலில் ஈடுபட்டுள்ளன. உள்ளாடைகள், சாக்ஸ், கைத்தறி நெசவு (கதர்) முக்கியமாக நடந்து வருகிறது.

அகில இந்திய காதி மற்றும் கிராமத்தொழில் நிறுவனம், கையால் செய்யப்படும் காகிதம் மற்றும் சுத்தமான எண்ணெய் தயாரிக்கும் தொழிலும் திருப்பூரில் நடைபெறுகிறது. திருப்பூர் காதி வஸ்திராலயத்தின் தலைமையிடமாக திருப்பூர் இருக்கிறது.

திருப்பூருக்கு மேலும் சிறப்பு செய்யும் தொழிலாக வெளிநாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி தொழில் பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளில் கால் சதவீதம் இங்கிருந்தே நடக்கிறது என்பது பெருஞ்சிறப்பாகும்.

திருப்பூருக்கு மேலும் சிறப்பு - விடுதலைப்போரில் 'கொடி காத்த குமரன் பிறந்த மண் என்பதே ஆகும்.
பல்லடம்:
விவசாயமும், கைத்தறியுமே இவ்வூரின் முக்கியதொழில்கள். இங்கு புகையிலை தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, மாதிரிதோல் பதனிடும் நிலையம் ஒன்றை அமைத்து இத்தொழிலுக்கு ஊக்கமளித்து வருகிறது. பல்லடத்து பெருமக்கள் - புல்லாங்குழல் வித்வான், சஞ்சீவராவ், பல்லடம் மாணிக்கம், பல்லடம் முத்துக்குமரன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேட்டுப்பாளையம்
1956-ஆம் ஆண்டு ஸ்வீஸ் நாட்டு ஒத்துழைப்புடன் செயற்கை வைரத் தொழிற்சாலை நிறுவப்பட்டது. பல்வேறு தொழிலகங்கட்கும் தேவைப்படும் செயற்கை வைரக்கற்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக மின்சார மீட்டர்களுக்கும், கைக் கடிகாரங்களுக்கும் இவை இன்றியமையாதவை. நாளொன்றுக்கு 40 கிலோ செயற்கை வைரக் கற்கள் உற்பத்தியாகின்றன. மேட்டுப்பாளையத்தில் உரத் தொழிற்சாலை, கண்ணாடித் தொழிற்சாலை, மின் துணி சலவை, இவற்றோடு வெற்றிலைக் கொடிக்காலும் இவ்வூருக்குச் சிறப்புச் செய்கின்றன.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி சந்தை புகழ்பெற்றது. இங்கு அம்பர் சர்க்காத் தொழிலகத்தில் ஆண்டுக்கு சுமார் இலட்சம் சர்க்காக்கள் உற்பத்தியாகின்றன. பொள்ளாச்சி மேற்கே 13 கி.மீ. தொலைவில் ஆழியாறு கரையில் ஆழியாறு பேப்பர் மில் 1984 முதல் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. பலதரப்பட்ட காகிதங்கள் ஆண்டொன்றுக்கு 500 டன் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 600க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

காடுபடு பொருள்கள் பொள்ளாச்சியில் நிரம்பக்கிடைக்கின்றன. பருத்தி பிரித்தெடுக்கும் ஆலைகள் 25 உள்ளன. துணி மற்றும் ரெடிமேட் ஆடைகள் வியாபாரம் பெருமளவில் நடைபெறுகிறது.

இவ்வூருக்கு மற்றொரு பெருமை தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் இவ்வூரைக் சார்ந்தவர் என்பதாகும்.
அவிநாசி:
அவிநாசி ஊராட்சி ஒன்றியத் தலைநகர். அவிநாசி கோவில் புகழ்பெற்றது. வரலாற்று சிறப்பு மிகுந்தது. பெருமளவு பருத்தியும், ஓரளவு கரும்பும் நெல்லும் விளைகிறது. சிறுமுகையில் விஸ்கோஸ் லிமிடெட் என்ற ரெயான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய - இத்தாலி நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. இங்கு ஸ்டேபிள் பைபர் தயாராகிறது. 1000 மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
அனுப்பம்பாளையம்:
திருப்பூர் அருகே உள்ளது இவ்வூர். அனுப்பம்பாளையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நெடுங்காலமாகவே பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ஆண்டொன்றுக்கு 150 டன்னுக்கு மேல் பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டு பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
உடுமலைப்பேட்டை:
பழனிமலை, ஆனைமலை, திருமூர்த்திமலை ஆகிய மலைகளுக்கு ஊடே இருப்பதால் இவ்வூர் உடுமலைப்பேட்டை எனப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 400 மீ உயரத்தில் உள்ளது. இவ்வூரில் உரத்தொழிற்சாலை மின்சார மோட்டார் பம்பு உற்பத்தி, காகித ஆலை ஒன்று, குளுகோஸ் தயாரிக்கும் நிறுவனம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, நுல் ஆலை, பருத்தி அரைக்கும் ஆலை போன்றவை உள்ளன. இயற்கை எழில் மிக்க அமராவதிஅணை இங்கு கட்டப்பட்டுள்ளது. சிறந்த திரைப்பாடலாசிரியரும், பகுத்தறிவு பாடல்களை இயற்றியவருமான உடுமலை நாராயணக்கவி இவ்வூரினைச் சார்ந்தவர் என்பது இவ்வூருக்கு மற்றொரு சிறப்பாகும்.
திருமுருக்கன் பூண்டி:
திருப்பூரில் அருகில் உள்ளது இவ்வூர். இது பாடல் பெற்றதலம் ஆகும். இங்கு கல், செம்பு சிலைகள் செய்யும் தொழில் நடைபெறுகிறது. பலவெளி நாடுகளுக்கும் இவ்வூர் சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பிற ஊர்கள்:
போத்தனுர் இரயில்வே தொழிற்சாலை முன்பு இருந்தது. கோவைக்கு அருகில் இருப்பதால் கோவையின் வளர்ச்சியை பொறுத்தே இந்நகரமும் வளருகிறது. புந்தி - உடுமலைக்கு 14 கி-மீ. தொலைவில் உள்ளது. இங்கு நல்லதேன் கிடைக்கும்.

சோமவார்பட்டி - கைத்தறிநெசவு, விவசாயம் சிறப்பாக உள்ளது. சங்கராராமநல்லுர் - கைத்தறி நெசவு, விவசாயம், கோயில் சிறப்பு உள்ள ஊர். திருமூர்த்திகோயில் - 3000 அடி உயரத்தில் உள்ளது. சுற்றுலாத் தலம்.

அன்னுர் - ஊராட்சி ஒன்றியத் தலைமையிடமாக உள்ளது. கோவில், விவசாயம், கைத்தறி சிறப்பாக நடைபெறுகிறது.

கருத்தாம்பட்டி - கிருஸ்தவ சிறப்பு உள்ள ஊர்

காரமடை - ஊராட்சி ஒன்றியத் தலைநகர், காரமடை தேர், கோவில் சிறப்பு வாய்ந்தது.

கரவலுர் - கோவில் சிறப்பு சிவன், பருமாள் கோவில்கள்

மொண்டிப்பாளையம் - அவிநாசிக்கு 12 மைல் உள்ளது. வெங்கடரமண சாமி கோவில் புகழ்பெற்றது.

சேயூர் - பழைய கோவிலால் புகழ்பெற்றது

துடியலுர் - வாணிபத்தலம்

வெள்ளூர் - வரலாற்று சிறப்புமிக்க ஊர்

மைலேரிப்பாளையம் - பழைய ஜாகிர்

தெலுங்குபாளையம் - எலும்பு முறிவு சிகிச்சைக்குப்புகழ்பெற்றது.

ஆனைமலை - ஆனைமலைப் பகுதி தேயிலை உற்பத்தியின் மூல ஊற்று எனலாம். மத்திய அரசின் தேயிலை ஆய்வுகூடம் உள்ளது.

வால்பாறை - காப்பி, சின்கோனா, ஏலக்காய், போன்றவை இங்கு மிகுதியாக விளைகின்றன.

No comments:

Post a Comment