Monday 30 January 2012

ஆடைக்கேற்ற அழகான காலணிகள் 2. டீன்-ஏஜ் பெண்ணின் பிரச்னை தெரியுமா

ஆடைக்கேற்ற அழகான காலணிகள்


ஏதோ ஒரு செருப்பு வாங்கினோமா… அதை பல வருடங்கள் போட்டு கிழித்து பின்னர் புது செருப்பு வாங்க சென்ற கடையில், கிழிந்த செருப்பைக் காட்டி இதே செருப்பு நீங்கள் வாங்கிய அதே விலையிலேயே இப்போதும் வேண்டும் என்று பேரம் பேசி வாங்கி நடந்து பார்த்து திருப்தி அடைந்த காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது. தங்களது ஆடைகளுக்கும், சென்று வரும் இடங்களுக்கும் ஏற்ற வகை வகையான செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் நாகரீகக் காலம் இது.ஆடையின் நிறத்திற்கேற்ற செருப்பு, அதிக உயரம் கொண்ட குதிக்கால் செருப்பு, கால்களை முழுவதும் மூடிக் கொள்ளும் கட் ஷ, மெல்லிய லேஸ்களைக் கொண்ட தளர்வான செருப்பு, பெரிய கற்கள் பதித்தவை, துணியால் அலங்கரிக்கப்பட்ட காலணிகள் என பலப் பல வகைகளில் காலணிகள் சந்தைகளில் குவிகின்றன.
ஒவ்வொன்றும் தரத்திற்கும், அழகுக்கும் ஏற்ற விலைகளில் கிடைக்கின்றன. குறைந்த விலையிலும் அழகான காலணிகளை வாங்கிச் செல்ல முடியும்.
பாதங்களின் அழகைக் கூட்டும் விதத்திலும் காலணிகள் கிடைக்கின்றன. இதிலும் மணப் பெண்களுக்கு என்று சில காலணிகள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன.
2000 ரூபாயில் இருந்து துவங்கும் இதன் விலைகள் எந்த இடத்திலும் நிற்பதில்லை. அதாவது திருமண ஆடையின் நிறத்தில், அதில் உள்ள வடிவமைப்புக்கு ஏற்ற வகையிலும், மணப்பெண் அணியும் நகைக்கு ஏற்ற வகையிலும் காலணிகள் தயாரிக்கப்படுகின்றன.
விருந்து நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சிக்கு செல்வதென்றால் ஆடம்பரமான காலணிகளை அணிந்து கொண்டு அனைவரையும் அசத்தலாம். ஆனால் தினமும் அலுவலகத்திற்கு அணிந்து செல்வதற்கு இவை எல்லாம் சரிபட்டு வராது.
மிகவும் நலினமாக, ஆனால் பார்ப்பதற்கே கொஞ்சம் விலை கூடுதல் போல என்று நினைக்க வைக்கும் வகையில் காலணிகள் வந்துள்ளன. சாதாரண தோற்றத்தில் நல்ல தரத்துடன் அணிவதற்கு சுகமானதாகவும் அலுவலக பயன்பாட்டிற்கு பல வகைகளில் காலணிகள் இடம்பிடித்துள்ளன.
காலணிகள் என்றதும் குழந்தைகளுக்குச் சொல்லவா வேண்டும். விளக்கொளியில் மின்னும் செருப்பு, ஒலி எழுப்பும் செருப்பு, சிறுவர்களுக்குப் பிடித்த பொம்மைகளை இணைத்திருக்கும் வகை, பெண் குழந்தைகளுக்குப் பிடித்த வண்ண வண்ண மணிகளைக் கொண்டவை, புசுபுசுவென தோற்றமளிக்கும் செருப்புகள் என ஏராளம் ஏராளம். இதிலும் விளையாட்டு வீரர்கள் அணிந்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் ஆண் குழந்தைகளுக்கு என பல்வேறு விதங்களில் செருப்புகள் வந்துள்ளன.
சந்தையில் பல வகைகளில் காலணிகள் வந்தாலும் நமக்கென்று ஒரு தேர்வு உள்ளது. உங்களுக்குப் பிடித்தவற்றை தேர்வு செய்து அணியுங்கள்.
காலுக்கும், காசுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் உங்களது தேர்வு இருக்கட்டும்.

டீன்-ஏஜ் பெண்ணின் பிரச்னை தெரியுமா?


பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.
இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.
டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?
* பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.
* சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.
* அடுத்து, இளம் பெண்களுக்கு, தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண் டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.
* வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.
* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.

No comments:

Post a Comment