Monday 30 January 2012

1.மென்மையான கைகள் வேண்டுமா, 2.வளர்ச்சியை அதிகப்படுத்தாது

மென்மையான கைகள் வேண்டுமா…


மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம். இந்த செயல்களுக்கு ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம். இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனினும், கைகளை பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால், இவற்றை தவிர்க்க முடியும். அதற்காக சில டிப்ஸ் கள் இதோ…
கைகள் பராமரிப்பு:
முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.
*ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.
*கைகளின் தோல் மிகவும் வறட்சியாக <உடையவர்கள், மேலே சொன்ன படி கைகளை கழுவிய பின், ஹேண்ட் கிரீமை அடர்த்தியாக, தடவ வேண்டும். பின், அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தி, சூடான பாரபின் மெழுகை ஊற்ற வேண்டும். பாரபின் மெழுகின் சூட்டால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் காணப்படும் துளைகள் விரிந்து ஹேண்ட் கிரீம் சிறப்பாக உறிஞ்சப்படும்.
* கைகளில், இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் (எக்ஸ்போலியன்ட்) தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின், சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவிய பின், மிதமான ஹேண்ட் வாஷ் தடவ வேண்டும்.
அவற்றை மிதமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் சீராகும். மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின், ஹேண்ட் லோஷன் தடவ வேண் டும். கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மிகவும் குளிர்ந்த பிரதேசத்தில் வசிப்பவர்கள், கைகளுக்கு கம்பளி உறைகள் அணிந்து, கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சன்ஸ் கிரீன்: வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால், இவை, தடுக்கப்படும்.

சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது


மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். சிறந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் கூந்தல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும், அத்தகைய கூந்தலை பெற முடியாது. கூந்தல் என்பது வேகமாக வளரும் திசு. எனவே, கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம்.
புரதச்சத்து:
கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன. நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
கார்போஹைடிரேட்:
கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.
கொழுப்பு சத்து:
உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது. எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.
வைட்டமின்கள்:
*மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.
* நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
*ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.
*”பயோட்டின்’ கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் “பயோட்டின்’ நிறைந்துள்ளது.
*இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.
கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும். முறையான உடற்பயிற்சி, உடலின் அனைத்து செல்களுக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே, வாரத்திற்கு மூன்று நாட்கள், 30 நிமிடங்கள் முறையாக உடற்பயிற்சி செய்தாலே போதுமானது.
மேலும், டீ, காபி மற்றும் மது ஆகியவை அருந்துவது, உடலின் தண்ணீர் மற்றும் முக்கிய ஊட்டச் சத்துக்களை வெளியேற்றி விடுகிறது. அவை, உணவில் இருந்து ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதையும் தடுக்கிறது. டீ மற்றும் காபி குடிப்பவர்கள், தினமும் ஒரு கப் என குறைத்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக பழச்சாறுகள் போன்றவற்றை குடிக்கலாம்.


No comments:

Post a Comment